முதிர்ச்சி தந்த அதிர்ச்சி!
திருமங்கையாழ்வார் பிறந்த திருவாலி திருநகரிக்கு (காஞ்சிபுரம் அருகிலுள்ள ஊர்) ராமானுஜர் விஜயம் செய்தார். அப்போது, ஒரு தாழ்த்தப்பட்ட குலப்பெண் ராமானுஜருக்கு நெருக்கமாக வந்து கொண்டிருந்தார். அம்மா! அடியார் கூட்டத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிச் செல்லக்கூடாதா? என்று கேட்டார் ராமானுஜர். எங்கே என்னை ஒதுங்கச் சொல்கிறீர். வலதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருமங்கையாழ்வாருக்கு உபதேசம் செய்த இடம். இடதுபக்கம் ஒதுங்கினால் திருவாலிப்பெருமாள் கோவில் உள்ளது. உலகம் முழுவதுமே உலகளந்தான் இருப்பிடம் தானே! இதிலே எனக்கென ஏது தனி இடம், என்றாள். அவளுடைய முதிர்ச்சியான பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ராமானுஜர். அம்மா! தாங்கள் சொல்வதே நிஜம். கடவுள் இல்லாத இடமேது! இந்த அரிய கருத்தை உணர்த்திய நீயே சங்கு, சக்கர சின்னங்களை ஏற்க தகுதியானவள் (தீவிர வைணவர்கள் உடலில் இந்த சின்னங்களை இடுவர்), என்று சொல்லி அவளை அடியவளாக ஏற்றார். எளியவர்களையும் ஜாதி வித்தியாசமின்றி அடியாராக ஏற்கும் உயர்ந்த பண்பாளராக ராமானுஜர் திகழ்ந்தார்.