திருப்பரங்குன்றம் தீர்த்த உற்சவம்: தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீர்த்த உற்சவம் நடந்தது. உற்சவத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையிடன் அருள்பாலித்தார்.
இக்கோயிலில் மார்ச் 14ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவையொட்டி தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது. தீர்த்த உற்சவத்தையொட்டி நேற்று காலை உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தர தேவர் எழுந்தருளினர். மார்ச் 14 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, புனிதநீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகால பூஜைக்குப்பின், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தர தேவர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் அஸ்தர தேவர் சரவணப் பொய்கை தண்ணீருக்குள் கொண்டு சென்று, தீர்த்த உற்சவம் நடந்தது.