சிவகாசி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா: ஏப்., 3 ல் துவக்கம்!
சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்., 3 ந்தேதி முதல் துவங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது. சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா ஏப்., 3 ல் இரவு 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உ<லா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குறிப்பாக எட்டாம் திருவிழா நாளில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். அன்று அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோயில் முன் வேட்டைக்கு செல்லுதல் நடைபெறும். 9 ம் நாள் திருவிழாவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தும், கயர் குத்து, முடிக்காணிக்கை, முத்துகாணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை ஆகிய நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கயர்குத்து திருவிழா சிறப்பாக நடைபெறும்.
10 ம் திருவிழாவில் தேர் வடம் தொடுதலும், தேர் இழுத்தல் நடைபெறும். தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா கொடியேற்றத்தின் போது கொடிமரத்தில் தென்னம் பூ வைத்து ஏற்றப்படும். திருவிழா முடிந்த பின் கொடி இறக்கி, வைக்கப்பட்ட தென்னம் பூவை, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை குழந்தை பேறு இல்லாத பெண்கள் பெற்று தென்னம் பூவையும், வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து குடித்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற நம்பிக்கை பெண்களிடம் உள்ளது. இதனால் அம்மன் கொடி மரத்தில் இருந்து இறங்கி வழங்கப்படும் தென்னம்பூவை பெண்கள் பக்தியுடன் ஆர்வமாக பெற்றுச் செல்வது வழக்கம். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.