கோட்டையூர் காளியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
நத்தம்: நத்தம் அருகே கோட்டையூர் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கடந்த மார்ச் 20 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கோட்டையூர், சின்னையம்பட்டி, நல்லூர், குரும்பபட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள், மதுரை அழகர் கோயிலில் உள்ள பழமுதிர்ச்சோலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டி விரதம் துவங்கினர். அன்று முதல் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மார்ச் 27 அன்று இரவு வேலார் வீட்டிலிருந்து கோயில் வீட்டிற்கு அம்மன் சிலை எடுத்து வரப்பட்டது. அங்கு கண் திறக்கப்பட்டு அலங்காரம் செய்து வாண வேடிக்கை, மேள, தாளம் முழங்க அம்மன் கோயிலை அடைந்தார். தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தனர். மறுநாள் காலை கிடா வெட்டு நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் மாலையில் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர். இரவு அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.