கள்ளழகரை வரவேற்ற மதுரை மக்கள்: எதிர்சேவையில் பரவசம்!
புதுார்: மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்டு, நேற்று மதுரை வந்தார் கள்ளழகர். மூன்று மாவடி, புதுாரில் சர்க்கரை, பொரி கடலை கலந்து வைத்த செம்பில் சூடம் ஏற்றி பக்தர்கள் எதிர்சேவை செய்தனர். அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை ௬ மணிக்கு நடக்கிறது. இதற்காக ஏப்.,20ல் அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டபங்களில் சேவை சாதித்தார். நேற்று காலை 6.00 மணிக்கு மூன்று மாவடி வந்த அழகரை மேள, தாளம் முழங்க எதிர்கொண்டு அழைத்த பக்தர்கள் வெண் பட்டு விரித்து, தரையில் விழுந்து வணங்கி வரவேற்றனர். தொடர்ந்து புதுாரில் காலை 8.00 மணிக்கும், அவுட்போஸ்ட் பகுதியில் மாலை 4.30 மணிக்கும் வந்த அழகரை பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை கலந்து வைத்த மஞ்சள் துணி சுற்றிய செம்பில் சூடம் ஏற்றி கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர். இரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்த கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீப ஆராதனை நடந்தது. பின் அங்கிருந்து புறப்பட்ட அழகர், தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி முன் உள்ள வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.