பரமக்குடியில் கருநீல பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணதிர கருநீல பட்டு உடுத்தி கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்.பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 17ல் காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பெருமாள், கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து சுந்தரராஜப் பெருமாள் பூப்பல்லக்கில் வேல், கம்பு, ஈட்டி, வளரி ஏந்தி, கோடாரி கொண்டையிட்டு கள்ளழகர் திருக்கோலத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காவல் தெய்வம் கருப்பண்ணசாமியிடம் விடைபெற்ற அழகர் வாண வேடிக்கை, பக்தர்களின் கோவிந்த கோஷம் விண்ணதிர நேற்று அதிகாலையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அழகரை மஞ்சள் நீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து காட்டுப்பரமக்குடி, மஞ்சள்பட்டினம் வழியாக ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். மேலும் பெரியபஜார், எமனேஸ்வரம் வழியாக, இரவு 12 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். வழிநெடுகிலும் மண்டகபடி மூலம் அழகருக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்தை, காக்கா தோப்பு பெருமாள் கோவில் வரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அழகரை தரிசித்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.