அய்யம்பாளையம் ஆற்றில் இறங்கினார் அழகர்
பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் வேடமிட்ட பெருமாள் குதிரை வாகனத்தில் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் அழகரை கோவிந்த கோஷம் எழுப்பி வணங்கினர். சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏப்.20ல் வரதராஜபெருமாள், பூமாதேவி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன் தினம் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்குவதற்காக குதிரை வாகனத்தில் புறப்பட்டார். நேற்று நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி வழியாக காலை 7.15 மணியளவில் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கினார். அழகரை கோவிந்த கோஷத்துடன் பக்தர்கள் வரவேற்றனர். சர்க்கரை, அவல், பொரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். யாதவர் குல எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து அய்யம்பாளையம் அய்யனார் கோயிலில் தரிசனம் தந்தார். அழகர் பொட்டல் ஆயிர வைசியர் மண்டகப்படியில் நேற்று இரவு தங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று தசாவதாரம் நடக்கிறது. நாளை ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர்வலம் வருகிறார். நாளை மறுநாள் பூப்பல்லக்கில் சித்தரேவு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு பூப்பலக்கில் புறப்படுகிறார். வெள்ளியன்று காமதேனு வாகனத்தில் சித்தரேவில் மஞ்சள் நீராட்டுடன் நகர் வலம் வந்து கோயிலைச் சென்றடைகிறார்.