பழநியில் வைகாசி விசாக விழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்!
ADDED :3634 days ago
பழநி: பழநியில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் மே 15ல் துவங்கி 24 வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டாடை அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் இரவு 7.20மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க மாங்கல்ய தாரணமும், மாலை மாற்றுதலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் ஏழாம் நாளான இன்று, மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.