சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், பத்து நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, அங்குரார்பணம், ரங்கநாதர், தாயாரம்மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு, உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்து, கொடிமரத்தின் அருகே எழுந்தருள செய்யப்பட்டார். தொடர்ந்து 10:00 மணிக்கு, கருட கொடியேற்றம் நடந்தது. பின், சூர்ய பிரபையில் சாமி புறப்பாடும், இரவு சாமி வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவாக பெரிய திருவடி எனும் கருட சேவை, வரும் 5ம் தேதி காலை நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி, யானை வாகனத்தில் சாமி ஊர்வலமும், 7ம் தேதி, காலை 7.30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை மணி, ஊராட்சி தலைவர் ரங்கநாதன், உபயதாரர் திருஞானசம்மந்தம், தேர்திருப்பணிக்குழு குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி, ஸ்ரீராம் ரங்கராஜ், தேவராஜ், ஸ்ரீராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜைகளை, நாராயணன் பட்டாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்தனர்.