சேதுக்கரை ஆஞ்சனேயரை நெருங்கிய கடல் அலைகள்
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயில், தெற்கு திசை நோக்கி கடற்கரையோரம் அமைந்துள்ளது. தை, ஆடி, மகாளய அமாவாசை மற்றும் விஷேச தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், சங்கல்ப பூஜைகளை செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த படித்துறையை, இடித்து விட்டு ரூ.9 லட்சத்தில் புதிய படித்துறை அமைக்கும் பணி துவங்கியது. ஆனால் பணி கிடப்பில் உள்ளது. தற்போது மணல் மேவி மேடாக உள்ளது. சிவகங்கையை சேர்ந்த பக்தர் ராமநாதன் கூறுகையில், கடலின் சீற்றம் காரணமாக ஆஞ்சநேயர் கோயில் முன்புள்ள தேங்காய் உடைக்கும் தொட்டி வரை அலைகள் தொட்டு செல்கிறது. கோயிலுக்கும் அலைக்கும் 5 அடி துாரமே உள்ளதால், மண் அரிப்பு ஏற்பட்டு, கோயிலுக்குள் கடல் நீர் செல்லும் அபாயம் உள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட படித்துறை அமைக்கும் பணியை துவக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.