உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி!

காரைக்கால் மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி!

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பரமதத்தர் செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. சிவபெருமானால் அம்மையே அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மயைாரின் இயற்பெயர் புனிதவதியார்.63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.

இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி, முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டார். முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பாரம்பரியப்படி மாப்பிள்ளையான பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. பின் உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமத்தார் செட்டியார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. இன்று காலை புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சியும் காலை 9 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளம் நிகழ்ச்சி நடக்கிறது.

10.40 மணிக்கு காரைக்கால் அம்மையார் பரமதத்ருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.மாலை பிஷாடண மூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்,இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கிள் வீதி உலா நடைபெறுகிறது. நாளை 19 ம் தேதி அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்களுக்கு மகா அபிஷேகமும்.காலை 9 மணிக்கு சிவபெருமாள் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதி உலா நடக்கும்.அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !