திருமலையில் கருடசேவை : பக்தர்கள் பரவசம்!
ADDED :3500 days ago
திருப்பதி : திருமலையில், கருடசேவை வெகு விமரிசையாக நடந்தது. திருமலையில், பிரம்மோற்சவ சமயத்தில், நடைபெறும் கருடசேவையை நேரடியாக வந்து காண முடியாத பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம், மாதந்தோறும், பவுர்ணமி அன்று மாலை, கருடசேவையை நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று மாலை, 7:00 மணிக்கு, திருமலையில், கருடசேவை நடந்தது. மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். இதை பல ஆயிரம் பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். கருடசேவைக்கு முன், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் நடந்தது. தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த, 200க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை, பாராயணம் செய்தனர். திருமலை மடம் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் பங்கேற்றனர்.