ரமலான் சிந்தனைகள் - 22: தயாள குணத்தை வளர்ப்போம்
நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில் நாம் நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ சாப்பிடுகிறோம். ஏழைகளும் இதைச் சாப்பிட வழி செய்ய வேண்டும். அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரமலான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள். “அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,” என்றாள். அம்மையார் அவளிடம், “அதுபற்றி நீ கவலைப்படாதே,” எனச் சொல்லி விட்டார். ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கி ஒன்றையே அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்! அம்மையாரைப் போல தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.