தஞ்சை பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி துவக்கம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் 14ம் ஆண்டு வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று வெகு விமர்சையாக துவங்கியது. தஞ்சாவூர் ராஜராஜசோழன் கட்டிய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெரியகோவிலுக்கு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்காண பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகிறார்கள். இங்கு குறிப்பிட்ட நாட்களில் சதயவிழா,பிராஹன் நாட்டியாஞ்சலி,ஆஷாட நவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விழாகள் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதைபோல, ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத கடைசியில் அமாவாசை தினத்தில் தொடங்கி பத்துநாள்கள் கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு பத்து வகையான சிறப்பு அலங்காரம் செய்து ஆஷாட நவராத்திரி விழா நடக்கும். இதையொட்டி நேற்று காலை மஹாகணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் மஹாவாராஹி அபிஷேகம் ஆகியவை நடந்தது. இதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதை போல வரும் 14ம் தேதி வரை தினமும் மாலையில் வாராஹி அம்மனுக்கு மஞ்சள்,குங்குமம்,சந்தணம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி, புஷ்ப ஆகிய பத்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. 14ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதல் நடைபெறுகிறது. வரும் 9ம் தேதி பஞ்சமி தினத்தன்று காலை பஞ்சமி அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு ஆயிரம் பேருக்கு சிறப்பு நைவேத்ய பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விழாவையொட்டி தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு வாராஹி ஹோமும், 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலையில் 6மணிக்கு மேல் சிறப்பு அலங்கார தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு மேல் சிறப்பு இன்னிசை நிழச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.