உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களை புனரமைக்க நடவடிக்கை இல்லை!

கோவில்களை புனரமைக்க நடவடிக்கை இல்லை!

உடுமலை: தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், பழங்கால கோவில்களை புனரமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில், அனுப்பப்பட்ட கருத்துரு குறித்து, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கோவில்கள் பொலி விழந்து வருகின்றன.  உடுமலை பகுதியில், அமராவதி மற்றும் உப்பாறு ஆற்றுப்படுகைகளில், பழங்கால கோவில்கள் அதிகளவு உள்ளன. முற்காலத்தில் சிறப்பு பெற்றிருந்த கோவில்கள் பல, காலப்போக்கில், போதிய பராமரிப்பின்றி, சேதமடைந்தன. குறிப்பாக, கற்களால் கட்டப்பட்ட கோவில் சுற்றுச்சுவர்களில், மரங்கள் முளைவிட்டு, வேர்களால், இடைவெளி அதிகரித்து, சேதம் கூடுதலாகியுள்ளது.

அமராவதி ஆற்றுப்படுகையான, கொழுமம், கொமரலிங்கம், கடத்துார் உட்பட பகுதிகளிலுள்ள, பல கோவில்களும், உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், சோழீஸ்வரர் கோவில், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில் ஆகிய கோவில்களும் போதிய பராமரிப்பின்றி, முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

தொலைந்த நம்பிக்கை: சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கொழுமம் பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகளுக்காக,  தொல்லியல் துறை வழிகாட்டுதல் பெற்று, புதிய நடைமுறையின் கீழ் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். புதிய நடைமுறையால், கல்வெட்டுகள், பழங்கால சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு, இந்து அறநிலையத்துறை சார்பில், தெரிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு காரணமாக, கிராம மக்களும், வரலாற்று ஆய்வாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கோவில் புதுப்பிப்பு பணிகளுக்காக, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பழமை வாய்ந்த சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவிலில், முன்மண்டபத்தின் மேற்கூரையில் விரிசல் அதிகரித்துள்ளது. நடனமண்டபத்தின் ஒரு பகுதியிலுள்ள துாண்கள் சரிந்து விட்டன. பிற பகுதிகளும் பொலிவிழந்து வருகிறது. நுழைவு மண்டபம் அருகிலுள்ள பகுதி செடிகள் முளைத்து காணப்படுகின்றன. பழமையான இந்த கோவிலை புனரமைக்க, கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்ட இந்து அறநிலையத்துறை இந்தாண்டாவது அதற்கான பணிகளை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !