காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கருட சேவை கோலாகலம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் ஆனி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆனி கருட சேவை, கருடாழ்வார், பெரியாழ்வார் அவதார உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, காலை கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. மாலை, 6:30 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, ஆழ்வார் பிரகாரம், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9:00 மணிக்கு பெரியாழ்வார் சன்னிதியில் பெருமாள் எழுந்தருளி, சாற்று முறை நடைபெற்றது. வரதராஜபெருமாள் ஆண்டுக்கு மூன்று முறை கருட வாகனத்தில் எழுந்தருள்வார். வைகாசி பிரமோற்சவத்தில் மூன்றாம் நாள் கருட சேவை திருவிழா, நேற்று நடைபெற்ற ஆனி கருட சேவை, வரும், 19ம் தேதி ஆடி கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.