உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

கருப்பராயன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

அன்னுார்: குன்னியூர் கைகாட்டி கருப்பராயன் கோவில் தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது. குப்பனுார் ஊராட்சி, குன்னியூர் கைகாட்டியில், கருப்பராயசாமி கோவில் உள்ளது. இக்கோவில் அருள்வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில், கருப்பராயருக்கும், செல்வ விநாயகருக்கும் தேர்கள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு தேர்த்திருவிழா இன்று (18ம் தேதி) துவங்குகிறது. இன்று மாலை விநாயகர் வழிபாடு, கரகம் எடுத்தல், அலங்கார பூஜை நடக்கிறது. 19ம் தேதி மாலை அபிஷேக பூஜையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுதலும், 7:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு தேர் நிலையை அடைகிறது.

சிறப்பு வழிபாடும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. 20ம் தேதி காலை 7:00 மணிக்கு பால் அபிஷேகம், 8:00 மணிக்கு பொங்கல் வைத்தல், முடி எடுத்தல் நடக்கிறது. மதியம் கருப்பராயன் சுவாமியை அழைத்து வருதல், சுவாமி திருவிளையாடல் நடக்கிறது. ஜமாப் இசை இகைப்படுகிறது. மதியம், 108 கிடாய்கள் கோவிலில் வெட்டப்பட்டு, சமர்ப்பிக்கப்படுகிறது. இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலிலிருந்து, கருப்பராயன் கோவிலுக்கு, 20ம் தேதி இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !