சின்னாளபட்டியில் சந்தனக்குட விழா
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ராமஅழகர்சாமி கோயில் ஆடி சந்தனக்குட விழாவில், சந்தன கலய ஊர்வலம் நடந்தது. இக்கோயில் தேவஸ்தானம் சார்பில், ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியில் சந்தனக்குட விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழாவிற்காக காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்குட விழா நடந்தது. சின்னாளபட்டி அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து பிருந்தாவனத்திற்கு, சந்தனம் நிரம்பிய கலய ஊர்வலம் நடந்தது. கோயிலில் விழாக்குழுவினரின் காப்பு அகற்றப்பட்டு, அனைத்து கலயங்களில் இருந்த சந்தனம் தனிப் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டது. அவற்றை கரைத்து, 18-ம் படி கருப்பணசுவாமி, கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசினர். சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பின்னர் ராமஅழகர்சுவாமிக்கு, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.