பெருநகரில் களரொளியம்மன் தேர் திருவிழா
ADDED :3579 days ago
பெருநகர்: பெருநகரில், களரொளியம்மன் கோவிலில், ஆடி மாத தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் களரொளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்றைய இரவு, அம்மன் குடம் வீதியுலா நிகழ்ச்சியும், 18ம் தேதி இரவு பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை, 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், 11.00 மணிக்கு பொங்க லிடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை, 3.00 மணிக்கு மலரால் அலங்கரிக்கப்பட்ட தேரில், களரொளியம்மன் வீதியுலா வந்தார். அப்போது, பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், தேர் இழுத்தும், முதுகில் முள் போட்டு ஆகாயத்தில் தொங்கிய படி நேர்த்தி கடன் செலுத்தினர்.