திருவள்ளூர் கோலம் கொண்ட அம்மன் வீதிஉலா
ADDED :3466 days ago
திருவள்ளூர்: ஆடி இரண்டாவது வாரத்தை முன்னிட்டு, கோலம் கொண்ட அம்மன், வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவள்ளூர், முகமது அலி தெருவில், கோலம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி இரண்டாவது வார திருவிழா, கடந்த 22ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்றைய தினம் அம்மனுக்கு, சந்தனக் காப்பு அலங்காரம், விநாயகருக்கு விபூதி காப்பு அலங்காரம் நடந்தது. மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு குங்கும காப்பு நிகழ்ச்சியும் நடந்தது.விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், காலை அம்மனுக்கு பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். பின், இரவு அம்மன் வீதிஉலா வந்தார். அம்மனுக்கு முன்பாக, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி உடன் வந்தனர்.