பழநி இடும்பன் மலை கிரிவலப்பாதை பக்தர்கள் எதிர்பார்ப்பு!
பழநி: பழநி இடும்பன்மலை அடிவாரத்தை சுற்றி 3 கி.மீ.,துாரத்திற்கு கிரிவலப்பாதை அமைப்பதற்கான திட்டம் கிடப்பில் உள்ளது.பழநி மலைக்கோயிலை சக்திகிரி என்றும் இடும்பன் மலையை சிவகிரி என அழைக்கப்படுகிறது. பழநி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை வணங்கிவிட்டு பின் மலைக்கோயிலில் முருகனை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் இடும்பன் மலைக்கு அதிகமாக செல்கின்றனர். 3 கி.மீ., சுற்றளவு உள்ள மலையைச் சுற்றி புதர்மண்டியுள்ளது. பின்புறத்தில் குப்பை கொட்டுகின்றனர். வலதுபுறத்திலிருந்து ஏற்கனவே மலை கோயிலுக்கு செல்ல ரோடு உள்ளது. இடதுபுறத்தில் பை-பாஸ் ரோட்டை இணைத்து புதிதாக கிரிவலப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக கோயில் அதிகாரிகள், வருவாய்துறையினர் இணைந்து இடும்பன்மலை இடது புறத்தில் 40அடி அகல கிரிவல பாதைக்கு நிலம் ஆய்வு செய்தனர்.அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லாமல் திட்டம் கிடப்பில் விடப்பட்டுள்ளது. கிரிவலபாதை அமைக்கப்பட்டால் தென்மாவட்டங்களிலிருந்து பழநி வரும் சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும்.நெரிசலும் குறையும். கிரிவலப்பாதையில் பக்தர்களின் வேண்டுதல்களில் ஒன்றான ராசிமரங்களை வைத்தால் இடும்பன் மலையை சுற்றி ரம்யமான சூழல் உருவாகும். கிரிவலப் பாதை திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.