திருக்கோஷ்டியூர் கோயிலில் 200 ஆண்டாக பளபளக்கும் எண்ணெய் சேமிப்புக் கலன்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மண்ணாலான எண்ணெய் சேமிப்புக் கலனை 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கோயிலில் பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக பக்தர்கள் விளக்கு ஏற்றி வருகின்றனர். மேலும் மின்சாரம் இல்லாத காலத்தில் கோயில் முழுவதும் எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக எண்ணெய்யை சேமிக்க மண்ணால் செய்யப்பட்ட கலன்களை பயன்படுத்தியுள்ளனர். இதில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக எண்ணெய்யை ஊற்றிச் செல்வர். தற்போது பயன்பாடு இல்லாமல் போனதால், கோயிலில் இருந்த 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேமிப்பு கலன் ஒன்றை தேவஸ்தானம், சிவகங்கை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த கலன் இன்றும் பளபளப்பாக காணப்படுகிறது. இதன் கொள்ளளவு 300 லி., சேமிக்கும் எண்ணெய் கசியாமல் இருக்க முந்திரி கொட்டை எண்ணெய், குங்கிலியம் (சாம்பிராணி) ஆகியவற்றை சேர்த்து சூடுபடுத்தி கலன் மீது பூசியுள்ளனர்.