திருச்செந்தூர் முருகன் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1:30க்கு விஸ்வரூப தீபாராதனை. 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் கொடியேற்றம் நடைபெற்று, கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. ஏழாம் நாளான ஆக., 28 ல் அதிகாலை 4:30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4:00 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 29 ல் மாலை சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 31 ல் காலை 6:30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பின் ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. செப்., 2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர்.ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.