லட்சத்தி எட்டு ருத்திராச்சத்தால் சரபேஸ்வரருக்கு அலங்காரம்!
சென்னை: கோடம்பாக்கம் தேவி கருமாரியம்மன் கோவில், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சரபேஸ்வரருக்கு, ஒரு லட்சத்தி எட்டு ருத்திராச்சத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது. கோடம்பாக்கம், ஆண்டவர் நகரில் தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு மூலவராக தேவி கருமாரியம்மனும், உற்சவராக பிரத்யங்கிரா தேவியும் அருள் பாலிக்கின்றனர். ஒவ்வொரு அமாவாசை தோறும், உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடத்தப்படுகிறது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தின் போது, அம்மனுக்கு லட்சத்தி எட்டு வளையல்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சரபேஸ்வரர், ஷீரடி சாய் பாபாவிற்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. கும்பாபிஷேக நாளன்று, சரபேஸ்வரருக்கு, ஒரு லட்சத்தி எட்டு ருத்திராச்சங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது.