மரக்காணம் கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ADDED :3354 days ago
மரக்காணம்: மரக்காணம் கடற்கரை பகுதியில், விநாயகர் சிலைகள் விசர்ஜன நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம், செஞ்சி, ஒலக்கூர், தீவனுார், நல்லாளம், முருக்கேரி, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு, தினந்தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று, இந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், வேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம், மரக்காணம் கடற்கரை பகுதிக்கு, விசர்ஜனம் செய்ய கொண்டு வந்தனர். இப்பகுதியில் உள்ள எக்கியர்குப்பம், கைப்பாணிகுப்பம், அனுமந்தைகுப்பம் ஆகிய கடற்கரையிலிருந்து, பைபர் படகுகளில் விநாயகர் சிலைகளை ஏற்றி சென்று, கடலில் கரைத்தனர்.