நவராத்திரி முதல் நாள் - அக்.2ல்: ராஜேஸ்வரியாக காட்சி
மதுரை மீனாட்சியம்மன் நாளை ராஜ ராஜேஸ்வரியாக காட்சி தருகிறாள். பண்டாசுரன் என்பவன், தனக்கு ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவரால் மரணம் நேரக்கூடாது என்று சிவனிடம் வரம் பெற்றான். பெண்ணின்றி குழந்தை பிறப்பது சாத்தியமில்லை என்பதால், தன்னை யாராலும் கொல்ல முடியாது என்று ஆணவம் கொண்டான். தேவர்களை துன்புறுத்தி அடிமைப்படுத்தினான். அவர்கள் ஆங்கிரச முனிவருடன் ஆலோசித்தனர். அவர் அம்பிகையை வழிபட்டு யாகம் நடத்தக் கூறினார். யாகத்தீயிலிருந்து தாயின் சம்பந்தமின்றி, ராஜராஜேஸ்வரியாக அம்பிகை அவதரித்தாள். அசுரனை அழித்து மூவுலகிற்கும் தானே அதிபதி என நிலை நாட்டினாள். ராஜராஜேஸ்வரியைத் தரிசித்தால் ராஜபோக வாழ்வு அமையும்.
நைவேத்யம்: வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், சுண்டல்
பாட வேண்டிய பாடல்
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும்என் புந்தியில் எந்நாளும் பொருந்துகவே.