உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம்

பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம்

திருப்பாச்சூர்: திருப்பாச்சூரில் பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான குளம், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.இந்த கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, 15 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. இதனால், கோவில் குளம் எப்போதும் நீரின்றி வறண்டே காணப்படும். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் நீர் நிரம்பி காணப்பட்ட கோவில் குளம், இரு மாதங்களிலேயே மீண்டும் வறண்டது.மேலும், இந்த கோவில் குளம் போதிய பராமரிப்பில்லாததால் படிகள் மற்றும் குளத்தின் நடுவே உள்ள மண்டபமும் சிதலமடைந்து காணப்படுகிறது.இவ்வாறு குளம் வறண்டு காணப்படுவதால், தற்போது கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அறநிலைய துறையினர், வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்தை சீரமைத்து தர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !