அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :3445 days ago
ஆர்.கே.பேட்டை : பவுர்ணமியை ஒட்டி, அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு அடுத்த, பொதட்டூர்பேட்டையில் உழவார திருபணி மன்றத்தினர் பலர் உள்ளனர். நேற்று முன்தினம், பவுர்ணமியை ஒட்டி, ஏறிபக்த நாயனார் உழவார மன்றத்தினர் முற்றோதல் நடத்தினர். அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காலை முதல், மாலை வரை நடந்த நிகழ்ச்சியில் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள் முதல், முதியவர் வரை கொண்ட இந்த உழவார மன்றத்தினர், தேவாரம், திருவாசகம், சிவபுராணம் உள்ளிட்டவற்றை பாடினர். சுற்றுப்புறத்தை முற்றிலுமாக மறந்து, பக்தியில் திளைத்தபடி அவர்கள் ஆனந்த கூத்தாடியது, பக்தர்களையும் பரவசம் அடையச் செய்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், உள்புறப்பாடு எழுந்தருளினார்.