ஏனாத்துார் சாலை பணியால் தீர்த்தங்கர் சிலை மறைப்பு!
ADDED :3320 days ago
கிராமப்புற சாலை சீரமைப்பு பெயரில், தீர்த்தங்கர் சிலையை மூடும் வகையில், தார் சாலை அமைத்திருப்பது, ஏனாத்துாரில், சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சைவம், வைணவம், பவுத்தம் ஆகிய மதங்கள், காஞ்சிபுரத்தில் இருந்துள்ளன. அதை பறைசாற்றும் வகையில், காஞ்சிபுரத்தில், பவுத்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியை, ஜைன காஞ்சி எனவும்; சைவர்கள் வாழ்ந்த இடத்தை சிவ காஞ்சி எனவும்; வைணவர்கள் வாழ்ந்த இடம் விஷ்ணு காஞ்சி எனவும், அழைத்தனர். இந்நிலையில், ஏனாத்துார் கீழ் தெருவில், சமீபத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, சாலையோரத்தில் இருக்கும் தீர்த்தங்கர் சிலையை மறைக்கும் அளவுக்கு தார் கொட்டி மறைக்கப்பட்டுள்ளது. இது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. – -நமது நிருபர்- –