உலகளந்த பெருமாள் கோவிலில் திருமூல மகோற்சவ விழா
ADDED :3304 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல மகோற்சவத்தை முன்னிட்டு மணவாள மாமுனிகள் புறப்பாடு நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், ஐப்பசி திருமூல மகோற்சவ விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், 5ம் நாளான நேற்று காலை 8:30 மணிக்கு மணவாள மாமுனிகள்‚ சன்னதியிலிருந்து புறப்பாடாகி‚ பெருமாள்‚ தாயார்‚ வேணுகோபாலன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று மங்களாசாசனம் நடந்தது. தொடர்ந்து, ஆஸ்தானத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மணவாளமாமுனிகள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில், கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.