ரிஷிவந்தியம் கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் செய்து விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. நவ வீரர்களுக்கு காப்பு அணிவித்து அதைத்தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. இரவு சுவாமி சர்வ அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். செங்குந்தர் சமூகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து தினமும் சுவாமி திருவீதியுலாவும், வரும் 4ம் தேதி கம்பம் ஏறுதலும், 5ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி சுவாமி திருக்கல்யாண வைபவமும், அடுத்த நாள் இடும்பன் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.