சபரிமலையில் 24 மணி நேரமும் அன்னதானம்: தேவசம் போர்டு நடவடிக்கை
ADDED :3289 days ago
சபரிமலை: சபரிமலையில் தனியார் அமைப்புகளின் அன்னதானத்தை கேரள ஐகோர்ட் தடை செய்தது. இதனால் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் காலை ஆறு முதல் இரவு நடை அடைக்கும் வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இரவில் பக்தர்கள் ஓட்டல்களை நாட வேண்டிஉள்ளது. இதை தொடர்ந்து அன்னதானத்தை 24 மணி நேரமும் நடத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு உறுப்பினர் அஜய்தரயில் கூறியதாவது: எவ்வித புகாரும் இல்லாமல் 24 மணி நேரமும் தேவசம்போர்டு அன்னதானம் நடத்தும். அன்ன தானத்துக்கு நன்கொடை வழங்கும் பக்தர்கள் தேவசம்போர்டு கவுன்டர்களில் மட்டும் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அன்னதான நன்கொடை பெற எந்த தனியார் ஏஜென்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வழிபாடுகள் நடத்தி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடமும் பக்தர்கள் ஏமாற வேண்டாம், என்றார்.