மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: குவிந்தனர் பக்தர்கள்
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் ஐகோர்ட் நீதிபதி நுாட்டி ராமமோகனராவ், மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி, தலைமை குற்றவியல் நீதிபதி சுபா அன்புமணி, செஞ்சி சார்பு நீதிபதி சுந்தரமூர்த்தி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேசன், குற்றவியல் நடுவர் சுதா, சப் கலெக்டர் ஸ்ரீதர், பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து சமய உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.