வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி நட்சத்திரத்தில் தீப விழா
ADDED :3245 days ago
நடுவீரப்பட்டு: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பாடல் பெற்ற தலங்களில், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று, கார்த்திகை தீபம் ஏற்றப்படும். ஆனால், கடலுார் அடுத்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில், பரணி நட்சத்திரத்தின் மறுநாளான ரோகிணி நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். கார்த்திகை விழாவை முன்னிட்டு, நேற்று மதியம் விநாயகர், வாமனபுரீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் எதிரிலுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தீப தரிசனம் செய்து, வழிபட்டனர்.