சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ஆருத்ரா கொடியேற்றம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம், நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனையொட்டி, நேற்று கொடி மரத்திற்கு விக்னேஸ்வர பூஜை நடந்தது. நாளை காலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பஞ்சமூர்த்திகள் பிரகார வலம்வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருள்கின்றனர். பின்னர், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, பன்னிரு திருமுறை வழிபாடு செய்து, காலை 7:00 மணிக்கு உற்சவக்கொடி ஏற்றி, மகா தீபாராதனை நடக்கிறது. தினமும் சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை, இரவு நடராஜர் புறப்பாடு, வேதபாராயணம், பன்னிரு திருமுறை பாராயணம் நடக்கிறது. 6ம் தேதி தெருவடைச்சான் உற்சவம், 10ம் தேதி நடராஜர் தேரோட்டம், மாலை, சுவாமி தேரிலிருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜசபையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனை, அதிகாலை 2:00 மணிக்கு சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 11ம் தேதி காலை ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பின், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, பிற்பகல் 4:00 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடக்கிறது. ஏற்பாடுகளை, சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் பட்டுரத்தின தீட்சிதர் தலைமையில், உற்சவ ஆச்சாரியார் நடராஜரத்தின தீட்சிதர் உள்ளிட்டோர் செய்கின்றனர்.