உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 11ல் ஆருத்ரா தரிசனம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 11ல் ஆருத்ரா தரிசனம்

திருவாலங்காடு: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், 11ம் தேதி, ஆருத்ரா இரவு அபிஷேகம், மறுநாள் அதிகாலையில் கோபுர தரிசனம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இக்கோவிலில், நடப்பாண்டிற்கான, ஆருத்ரா அபிஷேகம், வரும், 11ம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால் விடிய, விடிய அபிஷேகம் தொடர்ந்து, அதிகாலை, 3:00 மணி வரை நடைபெறும். பின் நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் கோவில் வளாகத்தில் வீதியுலா வருவார். அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் கோவில் முன் வந்து, அருள்பாலிப்பார். அப்போது கோபுர தரிசனம் நடைபெறும். இந்த விழாவில், சித்துார், சென்னை, காஞ்சிபுரம், வேலுார் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் வந்திருந்து மூலவரை வழிபட்டு செல்வர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !