கச்சபேஸ்வரர் கோவிலில் சிலைக்கு சிறப்பு பூஜை
ADDED :3310 days ago
காஞ்சிபுரம்: கோவையில் இருந்து, 2,900 கி.மீ., பயணம் செய்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரம் வந்த, ஆதியோகி சிவன் ரதத்தை, பக்தர்கள் வரவேற்று, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கோவை, ஈஷா மையத்தில், உலகிலேயே மிகப்பெரிய, 112 அடி உயர ஆதியோகி சிவன் திருமுகச்சிலை, பிப்., 24ல், மஹா சிவராத்திரியன்று, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்விழாவிற்கு, பக்தர்களை வரவேற்கும் வகையில், தமிழகம் முழுவதும், இரு ஆதியோகி ரதங்கள் வலம் வருகின்றன. அதில் ஒரு ரதம், கோவையில் இருந்து, 2,900 கி.மீ., பயணம் செய்து, ஆற்காடு வழியாக நேற்று முன்தினம், மாலை, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் மண்டபம் வந்தது. பக்தர்கள் மற்றும் காஞ்சிபுரம் ஈஷா மைய தன்னார்வ தொண்டர்கள், ரதத்தை வரவேற்று, கற்பூர ஆரத்தி எடுத்து, பயபக்தியுடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின், ரதம் அரக்கோணத்திற்கு சென்றது.