திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று, மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் உட்பட பல்வகையாக அபிஷேகங்கள் முடிந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மலைக்குப்போகும் பாதையில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று விழா நடப்பது வழக்கம். நேற்று காலை, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேகப் பொருட்களை சிவாச்சாரியார்கள், பழனி ஆண்டவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு மூலவருக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துகுமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர். இரண்டு உற்சவர்கள் ஒரே நாளில் புறப்பாடாவது ஆண்டிற்கு ஒருமுறை, தைப்பூசத்தன்று மட்டுமே. பறவை காவடிகள்: நேற்று காலை முதல் பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் முகத்தில் அலகு குத்தியும், இளநீர், பன்னீர் காவடிகள் எடுத்தனர். மதுரை பக்தர்கள் பறவை காவடிகளில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் இந்த ஆண்டு முதல் முறையாக தைப் பூச திருவிழா கொண்டாப்பட்டது. தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி, தேவ சேனா சமேத கல்யாண முருகன் முன்பு யாகசாலை பூஜைகள் முடிந்து உற்சவர்கள், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தங்கமயில் வாகனத்தில் உற்சவர் புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.