பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
ADDED :3323 days ago
பழநி: பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியலில் 12 நாட்களில், இரண்டு கோடி ஒரு லட்சத்து மூன்றாயிரம் ரூபாய் வசூலானது. பழநி தைப்பூச விழா பிப்.,3 முதல் பிப்.,12 வரை நடந்தது. இதனால், 12 நாட்களில் நிரம்பிய மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் நேற்று எண்ணப்பட்டது. அதில், இரண்டு கோடி ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 862 ரூபாய், தங்கம் -460 கிராம், வெள்ளி -14,600 கிராம், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் -1077ம் இருந்தன. எண்ணிக்கையில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.இன்றும், உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.