உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா

காசி விஸ்வநாதர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா

ஊட்டி: ஊட்டி காந்தல், விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், பிப்24, மகா சிவராத்திரி விழா நடந்தது. ஊட்டி காந்தல் விசாலாட்சியம்பாள் உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில், கடந்த 23ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. காந்தல் ஆதிபராசக்தி மகளிர் குழு, ஊட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. காலை, 7:00 மணிக்கு கலச சாந்தி பூஜை, காலை, 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, காலை, 11:30 மணிக்கு அன்னதானம், பிற்பகல், 2:00 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, மகா யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு, மகா பிரதோஷம், மகா சிவராத்திரி வழிபாடு, 3:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு சுவாமி கோவில் வலம் வருதல் ஆகியவை நடந்தன.

தொடர்ந்து இரவு, 8:30 மணிக்கு யோகத்தில் சிறந்தது பக்தி யோகமே, கர்ம யோகமே என்ற தலைப்பில், அரசு கலை கல்லுாரி முனைவர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து மாணவ, மாணவியரின் பாடல்கள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், தென்றல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தட்சிணாமூர்த்தி திருமடாலய அறங்காவலர் குழு, காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்னேற்ற சங்கத்தினர், சேவா சங்கத்தினர், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர், ராயபோயர் குடும்பத்தினர் உட்பட பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !