லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்!
ADDED :5134 days ago
மாமல்லபுரம் : புலிக்குன்றம், லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், திருப்பாவாடை உற்சவம் நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த புலிக்குன்றம் கிராமத்தில், லஷ்மி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தீபாவளிக்கு மறுநாள் கோவர்த்தனகிரி பூஜையையொட்டி, திருப்பாவாடை உற்சவம் நடைபெறும். வழக்கம்போல், இந்தாண்டு உற்சவம், நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. காலையில் உற்சவர் வரதராஜபெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. மாலை 3 மணிக்கு, தன் இடதுகையில், கோவர்த்தனகிரியை தாங்கிய அலங்காரத்தில், பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு பலவகை இனிப்புகள் மற்றும் காரங்கள் நிவேதனம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வங்கீச நாராயண கைங்கர்ய சபையினர், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.