பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறவைக்காவடி
பொள்ளாச்சி: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த மாதம் 21ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். விழாவையொட்டி கோவில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தினசரி சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 3ம் தேதி முதல் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய, பூவோடு ஏந்தி வழிபாடு செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம், பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்களும் பூவோடு எடுத்து வந்தனர். இதில், மார்க்கெட் ரோடு பகுதியிலிருந்து பக்தர்கள் நான்கு அடி நீளமுள்ள பறவைக்காவடி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி, பறவைக்காவடி எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.