வெள்ளி தேரோட்டம் கோலாகலம் களைகட்டியது மாரியம்மன் திருவிழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, வெள்ளித்தேரோட்டம் நேற்று துவங்கியது.பொள்ளாச்சி நகரின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 14ம் தேதி சாட்டப்பட்டு, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் காலை மாரியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை கோவில் வளாகத்தில் இருந்து முதல் நாள் தேரோட்டம் துவங்கியது. இதில், 12 அடி உயரமுள்ள மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயரமுள்ள வெள்ளித் தேரில் மாரியம்மனும் எழுந்தருளினர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்திற்கு இடையே, இரவு 8:45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து, இரவு 9:00 மணிக்கு வெள்ளித் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். கோவிலில் இருந்து வெளியில் வந்த தேர், மார்க்கெட் ரோடு வழியாக, வெங்கட்டரமணன் வீதிக்கு வந்து நிலை கொண்டது. அங்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள், தேர் சக்கரத்துக்கு உப்பு, குறுமிளகு கெட்டி, வழிப்பட்டனர். நேற்று மாலை வரை தேர் அதே இடத்தில் நிலை கொண்டது. பிறகு இரண்டாம் நாள் தேரோட்டமாக, உடுமலை ரோடு வழியே சென்று, சத்திரம் வீதியில் நிலை கொண்டது. இன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு, தேர்நிலைக்கு வந்து சேர்வதுடன், மூன்று நாள் வெள்ளித் தேரோட்டம் நிறைவு பெறும். பிறகு பாரி வேட்டை, தெப்பத்தேர் வைபவங்கள் நடைபெறும்.