பராமரிப்பில்லாத பாளையக்காரர்கள் கோவில்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி
அருகே பழமை வாய்ந்த கோவில் போதிய பராமரிப்பின்றி, கருவறை உட்பட
கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன. கோவிலை புனரமைக்க இந்துசமய அறநிலையத்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி
சுற்றுப்பகுதி கிராமங்களில், மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில்,
பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டன. கோவிலில், நித்ய பூஜை செய்யவும்,
பராமரிப்புக்கும், பூஜைக்கு தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்கவும்
நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. மேலும், பூஜை செய்பவர்களின்
வாழ்வாதாரத்திற்காக அப்போதைய ஆட்சியாளர்களால், நிலங்கள் வழங்கப்பட்டன.
காலப்போக்கில், நிலங்கள் உள்ள கோவில்கள், இந்து சமய அறநிலையத்துறை
கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், கோவில் நிலங்கள்
ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்படவில்லை. இதனால், பல கோவில்களில் ஒரு கால
பூஜையே நடைபெறாமல் பூட்டி கிடக்கின்றன. அந்த பட்டியலில் பொள்ளாச்சி அருகே
பழமை வாய்ந்த பெருமாள் கோவிலும் இணைந்துள்ளது.
பரிதாப நிலை:
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்டது சிஞ்சுவாடி. இந்த கிராமத்தில்,
கொஞ்ச துாரம் சென்றதும் ரோட்டோரம் மிக எளிமையாக கூரைகளை தாங்கிய கோவிலாக
காட்சியளிக்கிறது பெருமாள் கோவில். சிஞ்சுவாடியை ஆட்சி செய்த
பாளையக்காரர்கள் வழிபாடு செய்வதற்காக ஸ்ரீதேவி, பூதேவி சமேத
வரதராஜப்பெருமாள் கோவிலை கட்டியுள்ளனர். கற்றளி முறையில் கட்டப்பட்ட
கோவிலில், மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாளும், கோவிலுக்குள்
பாளையக்காரர்கள் சிலையும், வெளிப்புறத்தில் கருடாழ்வார், விநாயகர் சிலையும்
உள்ளன. மிக எளிமையாக காணப்படும் இந்த கோவில் பழமையை உணர்த்தும் வகையில்
அமைந்துள்ளது.
பராமரிப்பில்லை: கோவில்கள் போதிய பராமரிப்புடன்
காணப்பட்ட சூழலில், இதற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக
கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்
ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் கோவில் போதிய
பராமரிப்பின்றி காணப்படுகிறது. மூலவர் சன்னதி சிதிலமடைந்துள்ளதால், மூலவர்
சிலைகள் முன்மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. கோபுரமும் பராமரிப்பின்றி
காணப்படுகிறது. மக்கள் கூறுகையில், கடந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பெருமாள் கோவில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை நடக்கிறது. இந்த
கோவிலுக்கு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணத்தடை நீங்கி
திருமணம் நடைபெறுதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. ஆனாலும் இந்த
கோவில் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என
பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை. பழமை வாய்ந்த கோவில்
சீரமைத்து தினசரி பூஜைகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களை
மீட்டு, புனரமைக்கப்பட வேண்டும், என்றனர். பழமை வாய்ந்த கோவில்கள்
வரலாற்றை உணர்த்தும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக கருதப்படுகிறது. அந்த
வகையில், பழமையை தொலைக்காமல், புனரமைத்து பாதுகாக்க இனியாவது அரசு
நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-நமது நிருபர்-