உற்சவ மண்டபங்கள் உயிர் பெறுமா?: அலட்சியத்தால் வீணாகும் சிற்பங்கள்!
வாலாஜாபாத்: பராமரிப்பு இல்லாத, உற்சவ மண்டபங்களை சீரமைத்து, பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்து உள்ளது. அதிகாரிகள் அலட்சியம் காட்டினால், வரலாற்று பொக்கிஷங்களை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என கூறப்படுகிறது. சோழர்களின் ஆட்சி காலத்திற்கு பின், பல்லவமன்னர்கள், காஞ்சிபுரம் நகரில் பல சிவன் கோவில்களை எழுப்பினர். அதன் பின், ஆட்சி கட்டிலில் அமர்ந்த, கிருஷ்ணதே வராயர்காலத்தில், பல வைணவகோவில்களைகட்டினர். தற்கேற்றவாறு,திருவிழாக்களை வகுத்துக்கொண்டனர்.
அதை நகர் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் விரிவுப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில்,காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஆண்டுதோறும், தை மாதம் பார்வேட்டை உற்சவத்திற்கும்; மாசி மாதம் தென்னேரி மற்றும் ராஜகுளம் கிராமங்களின் தெப்போற்சவ விழாக்களுக்கும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். திருவிழாக்களுக்கு செல்லும் காஞ்சி வரதரை வரவேற்பதற்கு, வையாவூர், ராஜகுளம், தாங்கி, திம்மராஜம்பேட்டை, புளியம்பாக்கம், பழையசீவரம், வெங்குடி, உள்ளிட்ட பல பகுதியில் உற்சவமண்டபங்களை எழுப்பியுள்ளனர். இம்மண்டபங்களில், பல தகவல்களைஉணர்த்தும் கலை நயமிக்க சிற்பங்களை காண முடியும். அவற்றில் பல மண்டபங்கள், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், சிலமண்டபங்கள் இடிந்து, சீரழிந்த நிலையிலும் காணப்படுகின்றன. இதனால், உற்சவ மண்டபங்கள் எல்லாம், காட்சி பொருளாக உள்ளதாக, ஆன்மிக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைத்து பாதுகாக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளது. இல்லை எனில், கலை நயமிக்க உற்சவமண்டபங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் மறையும் அபாயம் உள்ளது.
வேலி அமைக்கலாம்: காஞ்சிபுரம்– செங்கல்பட்டு சாலையில்,தாங்கி கூட்டு சாலை அருகே,பழமை வாய்ந்த உற்சவ மண்டபம் ஒன்றை, தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த மண்டபத்தில் கலை நயமிக்க சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும், உயிரோட்டம் உள்ளவை. ஆகையால் தான் வேலி போட்டு பாதுகாத்து வருகிறோம் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல், பல உற்சவ மண்டபங்களை பாதுகாக்கலாம்.
நிதியில்லை !: பழமை வாய்ந்த உற்சவ மண்டபங்களில், பெரும்பாலானவைகள் இந்து சமய அறநிலைய துறை சொத்துப்பட்டியலில், கணக்கு வரவு இல்லை. கணக்கில் இல்லாத ஒரு பொருளை எவ்வாறு பாதுகாக்க முடியும். அதற்குரிய நிதியும், எங்கள் துறையில் இல்லை. இந்து சமய அறநிலைய துறை அதிகாரி, காஞ்சிபுரம்