தட்சின திருப்பதி கோவில் விழா
ஓசூர்: ஓசூர் அடுத்த கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடந்த எருதுவிடும் விழாவில், 150 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஓசூர் அடுத்த கோபசந்திரம் தட்சின திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 31ல் துவங்கியது. 7ல் காசியாத்திரை நிகழ்ச்சி, கல்யாண உற்சவம், கஜவாகன உற்சவம், 8 காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவாரி அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், காலை, 10:45 மணிக்கு தேர்த்திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு பிரகார உற்சவம், வசந்தோற்சவம், தெப்ப உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி நேற்று காலை, 9:30 மணிக்கு எருது விடும் விழா நடந்தது. இதில், சூளகிரி, காமன்தொட்டி, உத்தனப்பள்ளி, பாத்தக்கோட்டா, பேரிகை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து,
150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கூட்டத்திற்கு மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை, 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த
தட்டிகளை எடுத்தனர். விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டிருந்ததால், பார்வையாளர்கள் மற்றும் காளைகளை அடக்கிய இளைஞர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழாவை காண திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.