விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி பேட்டை தெரு சுந்தர மண்டப விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழா, ஏப்.,16 காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தியும், தொடர்ந்து யாகசாலை பிரவேசமாகி முதல்கால யாக பூஜைகள் துவங்கியது. ஏப்.,17 அதிகாலை 5:00 மணிக்கு பிம்பசுத்தி, லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் நிறைவடைந்தன. பின் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள்புறப்பாடாகி கோபுரத்தை அடைந்தது. காலை 9:45 மணிக்கு சுந்தர மண்டப விநாயகர் கோயில் சாலகார விமானத்திற்கும், அதனையடுத்து சுந்தர மண்டப விநாயகருக்கும் மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபையினர், உலோகநாதன், டாக்டர் வரதராஜன் செய்திருந்தனர்.
*பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் ஏப்.,16 மாலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜையும், இரவு 10:00 மணி வரை முதல்கால யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜை நிறைவடைந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகின. தொடர்ந்து 10:00 மணிக்கு சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் மக்கள் செய்திருந்தனர்.