உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கோலாகல துவக்கம்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கோலாகல துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் மிக கோலாகலமாக  தொடங்கியது.


உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வர் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கோவில் வாளகத்தில் இன்று காலை 6.30 மணி முதல் 7.30 வரை பிரகதீஸ்வர், பிரகன்நாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. மேளா,தாளம் முழுங்க, ஓதுவார்கள் திருமறைமந்திரம் ஓத கொடியேற்றம் நடந்தது.

பின்னர், கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு,தீபாரதணை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து 2ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வருகிற நாளை மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. மறுநாள் 23ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் ஊர்வலம், 24ம் தேதி காலை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை மேஷவாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 25ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமி பல்லக்கில் புறப்பாடும், மாலை சுப்பிரமணியர் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 26ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரமும், மாலை சைவ சமயாச்சாரியார் நால்வர் புறப்பாடு நடக்கிறது. 27ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் கோயிலுக்குள் புறப்பாடு, மாலை சூரிய பிரபையில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

தொடர்ந்து, திருவிழாவின் 15ம் நாளான மே 5ம் தேதி காலை 5.30 மணிக்கு தியாகராஜர் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி, காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. தேரோட்டம் 4 ராஜவீதிகளில் சென்று தேர் மண்டபத்தை வந்தடைக்கிறது. வருகிற 8ம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடக்கிறது. அதே போல் தினமும் இரவு கோயில் வளாகத்தில் சின்னமேளம் என்ற கலை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !