சென்னை பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :3158 days ago
சென்னை: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம், நேற்று மாலை, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், நேற்று மாலை, துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா நாமத்தை உச்சரித்தனர். நாளை, கருடசேவை உற்சவமும்; 9ல், தேர் திருவிழாவும் நடக்கிறது. ஜூலை, 12ல், கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. ஜூலை, 13 முதல், 15 வரை, விடை யாற்றி உற்சவம் நடக்கிறது.