பிரதோஷத்தை முன்னிட்டு தர்மபுரி சிவன் கோவில்களில் பூஜை
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவிலில், மகாலிங்கேஸ்வரருக்கு, மாலை, 5:00 மணிக்கு மேல், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின், மாலை, 5:30 மணிக்கு, கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, பால், பண்ணீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், நெசவாளர் காலனி மற்றும் தர்மபுரியில் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மாலை, 6:00 மணிக்கு மேல், மகாலிங்கேஸ்வர உற்சவ மூர்த்தி, கோவில் பிரகாரத்ததை சுற்றி வலம் வந்தார். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், காரிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில், எஸ்.வி.,ரோடு, ஆஞ்சநேயர் கோவில், பழைய மிட்டாரெட்டி அள்ளி ரோடு, சித்தலிங்கேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிபராசக்தி சிவன் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜை நடந்தது.